யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்- PART-2

ஆத்மார்த்தமான காதலை...மாசற்ற பிரேமையைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்னக் கவிதைகள்.PART-2

Saturday, February 25, 2006

அழகின் இலக்கியமே...








உனது புன்னகை....
பால் நிலாவை
பைத்தியம் பிடிக்க வைக்கும்.

உனது பேச்சு....கிளிகளுக்கும்
கிளுகிளுப்புக் கொடுக்கும்.

உனது நடை...அன்னப் பறவைக்குப்
பாடம் நடத்தும்...

உனது பாட்டைக் கேட்டால்..குயில்கள்
சங்கீதக் கலையின்
இலக்கணம் அறியும்.

- யாழ் சுதாகர்

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள் [NEW]

உனது நிழலில்...


பாடுவது ஆயிரம் பாடலாக இருந்தாலும்...
அங்கேதேடுவது உன்னை மட்டும் தான்.

ஓடுவது ஆயிரம் பாதையில் என்றாலும்...
அங்கே ஒதுங்குவது உன் நிழலில் மட்டும் தான்.

ஆறுகள் ...பல பாதைகளில் வரலாம்.
ஆனால்...என் 'ஆறுதல்' என்பது
உனது பாதையில் மட்டுமே வரும்.

நான்...இசையை ரசிக்க ஆரம்பித்த போது
என் வாழ்க்கை...
இன்பமானது.

நான் உன்னை ரசிக்க ஆரம்பித்த போது
என் வாழ்க்கையே
' இசை' ஆனது!

- யாழ் சுதாகர்
LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

கண்களால்..



'எண்கள்'...
மனிதனை பாதிக்கின்றனவாம்.
எண் ஜோதிடர்கள் சொல்கின்றார்கள்.

என்னை பாதித்தவை...
எண்கள் அல்ல.
உனது கண்கள்!- - -

மூன்றாம் பிறையைப் பார்த்தால்
நல்லதாமே?
எனக்கு...உன் நெற்றியைக் காட்டு!

- யாழ் சுதாகர்

உனக்குத் தெரியுமா?


நான் எழுதியிருந்தாலும்
நான் பார்த்துப் பார்த்துப்
பிரமித்துப் போகும்
ஒரே கவிதை...
'நீ'...மட்டுமே!

ஆயிரம் ஆயிரம் கவிதைகளை

நான் படித்திருந்தாலும்
படிக்க படிக்க சலிப்புத் தராத
ஒரே கவிதை...உனது புன்னகை மட்டுமே!

- - -

நீ...சிரித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
அப்போது தான்
என்னைச் சுற்றிச் சுற்றிப்பறந்து கொண்டிருக்கும்
'விரக்தி' என்ற பருந்து
வெருண்டோடும்.

உனக்குத் தெரியுமா?
எனது கவிதை வங்கியில்
உனது புன்னகைகளையே
அதிகமாக நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

புன்னகையில் நீ
கஞ்சத் தனம் காட்டாத வரை
கவிதைகளில் நான் கர்ணனாக இருப்பேன்.

- யாழ் சுதாகர்

வல்லமை தந்தாயே...





நான் நிலவைப் பார்க்க
நாடி வந்த போதெல்லாம்
'இன்று அமாவாசை என்று உனக்குத் தெரியாதா?'
என்று வானம் அனுதாபப்பட்டது.

நான் கோயில் வாசலை நெருங்கிய போதெல்லாம்

அர்ச்சகர் நடை சாத்தி விட்டு
அவசர அவசரமாக
வெளியே கிளம்புவது தெரிந்தது.

என் மீது விழுந்த மாலைகள் கூட
வாசம் துறந்த நாட்பட்ட மாலையான பின்பே
என்னை வந்து சேர்ந்தன.

சொற்பொழிவுக்கு போன போதெல்லாம்
கூட்டம் எழுந்து செல்லும் கடைசி நேரத்திலே தான்
நான் பேச அழைக்கப்பட்டேன்.

பழக் கடைப் பக்கம் போனாலும் கூட
வண்டு துளைத்த பழங்களுக்கே
நான் வாடிக்கையாளனாக இருந்தேன்.

உயிரைக் கொடுத்து நான்
உழைத்த போதெல்லாம்...
எனக்குப் பக்கத்திலே
உழைக்கும் நேரத்தில்
உறங்கிக் கொண்டிருந்தவனுக்குக்கிடைத்த மரியாதையில்
பாதி கூட எனக்குக் கிடைக்கவில்லை.

எனது புயல்கள் எல்லாம்
எதிர் பாராத விதமாக ஒரு நாள்
தென்றலாய் மாறின.

நான் கண் மலர்ந்து பார்த்த போது...
எனது முட் படுக்கை....
மலர்ப் படுக்கையாகமனம் மாறியிருந்தது.

முதன் முதலாகஎனது கிழக்கில்
சூரிய விளக்கைப் பார்த்து
கண் கூசினேன்.

கோட்டான்கள் மட்டுமே
அவலக் குரல் எழுப்பிய
எனது நந்தவனத்தில்
முதன் முதலாககுயில்களின் பாட்டு.

நான் உங்களைக் காதலிக்கிறேன்'
என்று நீ சொன்ன வார்த்தைகளுக்கு....

இத்தனை சக்தியா !?......

- யாழ் சுதாகர்

அழகி

முன்னழகால்
என் மனதில் பந்தடித்தாய்.

கண்ணழகால்
பொன் கவிதை சிந்த வைத்தாய்...

பின்னழகால்
என் இமைகளை நிற்க வைத்தாய்...

நடை அழகால்
என் இளமை சொக்க வைத்தாய்.

- யாழ் சுதாகர்

காந்தம்

பெண்ணுக்குள் இருக்கும் வினோதங்கள் அறிய
ஆர்வத்தை ஊட்டுகின்றாய்...

கண்ணுக்குள் புகுந்து நெஞ்சுக்குள் நுழைந்து...
கலவரம் மூட்டுகின்றாய்!

- யாழ் சுதாகர்

அமுதம்


விஷம்
என் தலைக்கு ஏறியது.
அவளுக்கு...பாம்புக் கூந்தல்!

- யாழ் சுதாகர்

சிரித்தாள்...



சிரித்தாள்...
என் ஒரு வருட டயரி...
ஒரே நாளில் தீர்ந்தது !

ஆமாம்.....
டயரியின் அத்தனை பக்கத்திலும்...
அவள்... முத்து முத்துப் புன்னகையைக்
கவிதைகளாய்
பதிவு செய்தேன்.

- யாழ் சுதாகர்

இனியவளே...


இனியவளே !
- - - ------------
கடிகாரம் அணிவதை
நான் நிறுத்தி விட்டதை
அறிவாயா நீ?

என் காலத்தின்
ஒவ்வொரு நொடியையும்
என் காதல் தேவதையே...நீ நினைவூட்டுவதால்...
என் மன அரங்கில்
உனது வருகையின் பின்...
கடிகாரம் என்பது
தேவையற்ற பொருள்ஆனதடி!

'முட்கள்' மட்டுமே அடர்ந்திருந்த
என் வாழ்க்கைக் காலத்தை...
கடிகாரத்தின் 'முட்கள்'சுட்டிக் காட்டிய நேரங்கள்
எனக்கு உணர்த்துகின்றனவோ என்று
ஒரு காலத்தில் நான் எண்ணியதுண்டு!

ஆனால்...இன்றுஉனது 'சொற்கள்' காட்டும் நேரங்கள்...
உன்னால் ஆசீர்வதிக்கப்பட்ட
என் ராசியான நேரங்களை
எனக்கு ஞாபகப்படுத்துதடி!!

கடிகாரத்தின் மணியோசையைக்
கேட்கும் போதெல்லாம்...
எனது வாழ்க்கையில்
அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்த
அபாய மணியோசையையே
அது எனக்கு ஞாபகப்படுத்தியது!

ஆனால்...உனது வருகைக்குப் பின்...
உன் கொலுசு மணியோசை ஒன்றே எனக்கு
கோயில் மணியோசையாகஒலிக்குதடி!

- யாழ் சுதாகர்

yarl suthahar,yarl suthakar,yarl suthagar,yarl sudhakar,yaal suthakar,yaal suthahar,
yaal sudhakar,yazh suthahar,yazh suthagar,yazh sudhakar,yaazh sudhakar,
yaazh suthakar,yaazh suthahar,yal sudhakar,yal suthakar,yal suthakar,yal suthagar,
tamil poems, kavithaikal,kavithaigal,tamil internet radioyaalppaanam suthakar,
yalpanam suthakar,yaalppaanam sudhakar,yalpanam sudhakar,yarlsuthahar,yarlsuthakar,yarlsuthagar,yarlsudhakar,yaalsuthakar,
yaalsuthahar,yaalsudhakar,yazhsuthahar,yazhsuthagar,yazhsudhakar,
yaazhsudhakar,yaazhsuthakar,yaazhsuthahar,yalsudhakar,yalsuthakar,
yalsuthakar,yalsuthagar,yaalppaanamsuthakar,yalpanamsuthakar,
yaalppaanamsudhakar,yalpanamsudhakar